Vanitha Pathippagam
1978 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் நாளில் அம்சவேணி அம்மையார், தன் கணவர் பெரியண்ணன் நூல்களை வெளியிடுவதற்காக தன் மகள் வனிதா பெயரில் வனிதா பதிப்பகத்தைத் தொடங்கினார். இவரே நிறுவனராகவும், பதிப்பாளராகவும் விளங்கி, பெரியண்ணன் எழுதிய "சிறுவர் இன்னிசைப் பாடல்கள்" என்ற நூலை முதன்முதலில் வெளியிட்டார். வெளியிட்ட ஆண்டே புதுவைப் பல்கலைக் கழகம் 100 பிரதிகளைப் பெற்றுக் கொண்டது. நூலக ஆணையும் பெற்று, நூல்களை நூலகங்களுக்குக் கொண்டு சேர்த்தார். முதல் நூலே பதிப்பக வளர்ச்சிக்கு உதவியது. 15 பதிப்புகள் வெளியிடப்பட்ட வெற்றி நூல். தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வாங்கி, பாடல்களைப் பாடி, மாணவர்களை மகிழ்வித்தனர். 8ஆம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் "மரம் வளர்ப்போம் வாருங்கள்" என்ற பாடல் இந்நூலிலிருந்து எடுத்து சேர்த்தனர்.
நல்லாமூர் முனைவர் கோ.பெரியண்ணன் எழுதிய, சாரணர் இயக்கம் வளர்ந்த கதை, சாரணர் இயக்க முன்னேற்றப் படிகள் போன்ற வரிசையில் 10க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டார். சாரணர் இயக்கம் என்ற நூலுக்கு தமிழக அரசு பரிசளித்துப் பாராட்டியது. முத்தமிழ் அகராதி, இயற்பியல் அகராதி போன்ற பல நூல்கள் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்கள் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டது. "இனிய தமிழில் இலக்கணப் பிழையின்றி எழுதும் முறைகள்" தவறின்றி தமிழ் எழுத, பேச, கற்க, தேன் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள், தேர்வுக்கு உதவும் தீந்தமிழ் இலக்கணம், திறன்வளர் இலக்கணப் பயிற்சிகள் போன்ற இலக்கண நூல்களை வெளியிட்டது வனிதா பதிப்பகம். இலக்கண நூல்கள், மாணவர்களுகேற்ற நல்ல நூல்களை வெளியிடும் பதிப்பகமாகத் திகழ்ந்தது.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பெண்கல்வி, தமிழகத்தில் செயல்வழிக்கற்றல், சமச்சீர் கல்வியும் சமுதாயச் செழுமையும், சமச்சீர் கல்வி இலக்கணம் போன்ற கல்வி தொடர்பான கல்வி நூல்களை வெளியிட்டு, பள்ளி தொடர்பான நூல்களை வெளியிடும் பதிப்பாக விளங்கியது.
தென் தமிழக தியாக தீபங்கள், ஏ.பி.ஜே.அப்துல்கலாம் வரலாறு, மாணவர்களுக்கு அம்பேத்கர், மாணவர்களுக்கு நேரு, அப்துல் கலாம், இந்திரா காந்தி, டாக்டர் இராதாகிருஷ்ணன், காமராசர், இராஜாஜி, அண்ணா போன்ற நாட்டிற்குழைத்த நல்லோர்கள் வரலாறுகளும், மாணவர்களுக்குப் பாரதிதாசன், பாரதி, கவிமணி போன்ற கவிஞர்கள் வரலாறுகளும் வெளியிட்டு, மாணவர்களின் நூல்களை வெளியிடும் பதிப்பகமாக மலர்ந்தது.நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், அஷ்டப்பிரபந்தம், கம்பராமாயணம், தேவாரம், திருவாசகம், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற பல நூல்களை மூலமும் உரையும், திருத்தமுற, எளிமையாகப் பொருள் உணர்ந்து கொள்ளும் வகையில் வெளியிட்டு இலக்கிய நூல்கள் வெளியிடும் பதிப்பகமாக உயர்ந்தது.
சாதனை படைத்த சான்றோர்கள் வரலாறு, நாளும் ஒரு மாமேதைகள், சான்றோர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு, அறக்கட்டளை விருதுகளைப் பெரியண்ணன் வெற்றிப்படிகள் முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி, வெற்றிப்படிகள், நினைவாற்றலுடன் வாழ்கையில் முன்னேற போன்ற தன் வரலாற்றுக் கட்டுரைகளையும், சுயமுன்னேற்ற நூல்களை வெளியிட்டு, அனைவருக்கும் தெரிந்த பதிப்பக ஏற்றம் பெற்றது.கல்வியியல் நூல்கள் தமிழகத்தில் அருகி காணப்பட்ட வேளையில், இளங்கலை, முதுகலை ஆய்வியல், அறிவியல் நூல்களை வெளியிட்டு, கிராமப்புற மாணவர்கள் பயிலும் வகையில், எளிமையாக, சுருக்கமாக, வேண்டிய கருத்துகள் அடங்கிய கல்வியியல் நூல்களை வெளியிட்டது. வரலாறு கற்பித்தலில் புதிய அணுகுமுறை என்னும் கல்வியியல் நூலுக்கு தமிழக அரசு பரிசு வழங்கிப் பாராட்டியது.
திருக்குறள் பெரியண்ணன் உரை ஓலைச்சுவடி வடிவில் தமிழ் ஆங்கில உரை, திருக்குறள் முழுவதிற்கும் திருக்குறள் கதை, ஒரு பக்க படக்கதை, திருக்குறளும் திறன்களும் போன்ற பல நூல்களை வெளியிட்டு, புகழ்பெற்ற பதிப்பகமாக விளங்குகிறது. திருக்குறள் பெரியண்ணன் உரை, 6 இலட்சத்திற்கு மேல் விற்று விற்பனையில் சாதனை படைத்துள்ளது.காலத்திற்கேற்ற வகையில், அரிய சிறந்த நூல்களை வெளியிட்ட பதிப்பகம், பெரியண்ணன் பிறந்த நல்லாமூரில் நூலகத்திற்கு இடம் இலவசமாக வழங்கியது. திருக்குறள் மணிமண்டபம் கட்டி, திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளது..
ஏழை எளிய மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றால், அவர்களை வனிதா பதிப்பகத்திற்கு வரவழைத்து 1000 ரூபாய் அளவிலான நூல்களைப் பரிசளித்துப் பாராட்டியுள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கட்டணம் கட்ட முடியாதவர்களுக்கு கட்டணம் கட்டியுள்ளது. சுற்றுச்சூழலை வளர்க்க, மரக்கன்றுகள் வழங்கிப் பாதுகாத்து வருகிறது. "வரலாற்றுப் புகழ் நல்லாமூர்" என்ற நூலை, பதிப்பித்து அனைவருக்கு 2000 பிரதிகள் இலவசமாக வழங்கி வருகிறது..
நல்லாமூர் மாணவர் சங்க நலநிதிக்கு பெருந்தொகை வழங்கி பெருமைபடுத்தி வருகிறது. நூல் வெளியிடும் தொகையில் ஒரு பகுதியை ஒதுக்கி, சமுதாய நலத்தொண்டுகளைச் செய்து வருகிறது. பதிப்பகத்தில் நூலெழுதிய ஆசிரியர்களைப் பாராட்டி, பரிசளித்துப் பெருமைப்படுத்தி வருகிறது..
கல்வி, கல்வியியல், இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமையல், சமுதாய வரலாறு போன்ற தலைப்புகளில் 2000க்கும் மேற்பட்ட நூல்களைத் தரமாக வெளியிட்டு பெருமைப்பெற்ற பதிப்பகம் வனிதா பதிப்பகம்.
Enter your e-mail address to receive regular updates, as well as news on upcoming events and special offers.